search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி"

    • முதலமைச்சரை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார்.
    • தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கூறப்படுகிறது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த முறை போல் அல்லாமல் 2 தனித் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது.

    ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதால் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது.

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட அழைத்தது. ஆனால் அவர் செல்லவில்லை. உயர் மட்டக் குழுவை கூட்டி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். 2 தனி தொகுதியையும், ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டு பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று உயர்மட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

    மேலும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிலையை விளக்க வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.


    அதன்படி முதலமைச்சரை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார். வெளியூர் சென்று இருந்த முதலமைச்சர் சென்னை திரும்பியதும் தன்னை அழைப்பார் என்று திருமாவளவன் எதிர் பார்த்தார்.

    ஆனால் இன்று காலை வரையில் விடுதலை சிறுத்தைக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

    முதலமைச்சரை சந்தித்த பிறகுதான் தொகுதி பங்கீட்டு உடன்பாட்டில் கையெழுத்திடுவதாகவும் உறுதியாக உள்ளார்.

    முதலமைச்சரிடம் இருந்து கட்டாயம் அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் திருமாவளவன் காத்து இருக்கிறார்.

    முதலமைச்சரை நேரில் சந்திக்கும் போது, கூடுதலாக கேட்கப்படும் பொதுத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கூடுதலாக ஒதுக்கப்படும் தொகுதிகூட தி.மு.க. சின்னம்தான்.


    அதனால் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்குவதால் தி.மு.க.விற்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என்பதை விளக்கவும் உள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருவதால் பேச்சுவார்த்தை தள்ளிப் போகிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சனாதன சக்தியான பா.ஜனதாவை இத்தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

    கடந்த தேர்தலை விட கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுவும் பொதுத் தொகுதி. கூட்டணி கட்சிகளை தி.மு.க. அலட்சியப்படுத்தக் கூடாது. தங்கள் முடிவை பரிசீலிக்க வேண்டும்.

    முதலமைச்சர் தலையிட்டால் தான் உடன்பாடு இறுதியாகும். முதலமைச்சரை சந்திக்கும் வரை இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் இன்று சந்தித்து பேசுவதற்கு அழைப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கூறப்படுகிறது.

    கூடுதலாக ஒரு தொகுதிக்கு வரிந்து கட்டும் விடுதலை சிறுத்தையின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலனை செய்வாரா? இல்லை 2 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்பதில் உறுதியாக இருப்பாரா? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவோம்.
    • தொகுதி பங்கீடு விவகாரத்தில் தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திப்போம்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவோம்.

    * தெலுங்கானாவில் 10 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்.

    * ஆந்திராவில் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். ஆந்திராவில் கூட்டணியில் இணைவதற்கான சூழல் அமையாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.

    * கர்நாடகாவில் 6 இடங்களிலும், கேரளாவில் 3 இடங்களிலும் போட்டியிட உள்ளோம்.

    * தொகுதி பங்கீடு விவகாரத்தில் தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திப்போம் என்று அவர் கூறினார்.

    • நாடாளுமன்ற பொதுத் தேர்தலை 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் நடத்த வேண்டும்
    • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது

    நாடாளுமன்ற பொதுத் தேர்தலை 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது என்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, 'நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்' என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும்; ஆளும் கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள தேர்தல் முறையைச் சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவே, வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக்கூடாது. மாறாக, எல்லா வாக்குப்பதிவு எந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டினைப் பெறும் எந்திரமும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான், வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்தபின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். அந்த ஒப்புகைச் சீட்டினை வாக்குப் பெட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்.



    இந்த கோரிக்கையைத்தான், "இந்தியா கூட்டணி" கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதே கருத்தை முன்னாள் தேர்தல் ஆணையர் திரு. குரேஷி உட்பட பல அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதற்காக தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை பல சிவில் சமூக அமைப்புகளும் ஆதரித்து பல்லாயிரக்கணக்கில் திரண்டு தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், பாஜக அரசு அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து அதிகாரத்துவ மமதையோடு நடந்து கொள்கிறது.

    தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் இரத்து செய்து தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒரு அமைச்சரை நியமித்துக் கொள்ள வகை செய்யும் வகையில் புதிய சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான 'பெல் நிறுவனத்தின்' இயக்குனர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாகத் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட போதும் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களை சந்திக்க மறுத்து வருகிறது.

    மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக வெளியிடப்படும் உண்மைகளை மக்களுக்குத் தெரியாமல் மறைக்கும் விதமாக அவற்றை சமூக ஊடகங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது.



    கடந்த தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த எண்ணிக்கைக்கும் ஒப்புகை சீட்டில் வந்த எண்ணிக்கைக்கும் பல இடங்களில் வேறுபாடுகள் இருந்தன. அதற்கான காரணம் தேர்தல் ஆணையத்தால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அதைப் பற்றியும் தேர்தல் ஆணையமோ, ஒன்றிய அரசோ விளக்கம் எதையும் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பயன்படுத்தப்படும் 'சிப்'பில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வெளியிலிருந்து மாற்றி அமைக்க முடியும் அதன் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்பதை வல்லுநர்கள் நிரூபணம் செய்துள்ளனர்.

    இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்தல் முறை மீது மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது. வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாவற்றோடும் ஒப்புகைச் சீட்டு கருவியை இணைக்க வேண்டும்; வாக்களித்ததும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒப்புகைச்சீட்டினைத் தனியே ஒரு பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என எல்லோரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், பாஜக அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ இதற்கு எந்த பதிலையும் கூறவில்லை.

    'இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்' என்று பிரதமர் மோடியும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், 400 இடங்களில் வெல்வோம் என்று அவர்கள் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணைபோகக்கூடாது. 100 சதவீதம் ஒப்புகை சீட்டை எண்ணித் தேர்தல் முடிவை அறிவிப்போம் என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

    இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 23- 02- 2024 ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளும், சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். எனவே, நேர்மையாகத் தேர்தல் நடத்த வலியுறுத்துவோம். பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிப்போம்!- என சனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ‘தேர்தல் பத்திரத் திட்டம்’ அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
    • நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

    தேர்தல் பத்திரத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது.

    இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் பத்திரத் திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலத்தில் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

    பாஜக அரசு 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்த 'தேர்தல் பத்திர திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கும் எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19 (1 ) (A) க்கு எதிராகத் தேர்தல் பத்திர திட்டம் உள்ளது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் நன்கொடை வழங்கினார்கள், எவ்வளவு வழங்கினார்கள், என்ற முழுமையான விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 6 க்குள் வழங்க வேண்டுமென்றும், தேர்தல் ஆணையம் அந்த விவரங்கள் அனைத்தையும் தனது இணையப் பக்கத்தில் மார்ச் 13ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது மட்டுமின்றி நன்கொடை கொடுப்பவரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதற்கென வருமானவரிச் சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் முதலானவற்றில் பாஜக அரசு செய்த திருத்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் எந்த அரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை இந்திய குடிமக்களுக்குத் தெரியவரும்.

    2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2024 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் 16,518 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன எனவும், அதில் சுமார் 6600 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

    இந்தியாவிலேயே மிக அதிகமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை தேர்தல் நன்கொடையாகப் பெற்றுள்ள பாஜக, அதை எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றது என்பதும், அதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கப்பட்டன என்பதும் விரைவில் தெரியவரும்.

    நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த வழக்கில் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, அடுத்து நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் அது அடையப்போகும் தோல்விக்கு முன்னோட்டம் என்றே மக்கள் கருதுகின்றனர்.

    உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தன்னை இணைத்துக்கொண்டிருந்தது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியதற்கு மற்றவர்கள் குறிப்பிட்ட காரணங்களை ஆதரித்ததோடு, விசிக போன்று விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்யும் சிறிய கட்சிகளுக்கு இந்தத் திட்டம் பாகுபாடு காட்டுகிறது எனவே இதை ரத்து செய்யவேண்டும் என விசிக தரப்பில் வாதிடப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து கருத்து தெரிவித்திருந்தது.

    இந்திய தேர்தல் சனநாயகத்தைக் காப்பாற்றுவதில் இந்தத் தீர்ப்பு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது. அதற்காக உச்சநீதிமன்றத்தை மனமாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம். இந்தத் தீர்ப்பை வழங்கியது போலவே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்த வழக்கையும் விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 7 வருடத்திற்கு பிறகு கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
    • வட சென்னை வடக்கு இளங்கோவன், வடசென்னை தெற்கு-அப்புன், மத்திய சென்னை கிழக்கு-சாரநாத், மத்திய சென்னை மேற்கு-வேலுமணி.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    7 வருடத்திற்கு பிறகு கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக 144 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    வடசென்னை கிழக்கு சி.சவுந்தர், வட சென்னை மேற்கு-உஷாராணி, வட சென்னை வடக்கு இளங்கோவன், வடசென்னை தெற்கு-அப்புன், மத்திய சென்னை கிழக்கு-சாரநாத், மத்திய சென்னை மேற்கு-வேலுமணி, மத்திய சென்னை வடக்கு-சேத்துப்பட்டு இளங்கோ.

    தென் சென்னை மையம்-சைதை ஜேக்கப், தென் சென்னை வடக்கு-கரிகால் வளவன், தென் சென்னை தெற்கு-இளையா, மேற்கு சென்னை-ஞான முதல்வன்.

    திருவள்ளுவர் கிழக்கு-நீலமேகம், திருவள்ளூர் மேற்கு-தளபதி சுந்தர், திருவள்ளூர் மையம்-அருண் கவுதம், வேலூர் கிழக்கு-கோவேந்தன், வேலூர் மேற்கு சுதாகர், திருப்பத்தூர்-வெற்றி கொண்டான், திருப்பத்தூர் வடக்கு-ஓம்பிரகாசம்.

    செங்கல்பட்டு வடக்கு-தென்னவன், செங்கல்பட்டு மையம்-கானல் விழி, செங்கல்பட்டு மேற்கு-பொன்னிவளவன், செங்கல்பட்டு தெற்கு-தமிழினி, ஆவடி மாநகர்-ஆதவன், காஞ்சிபுரம் மாநகர்-மதி ஆதவன், வேலூர் மாநகர்-பிலிப், ஓசூர் மாநகர்-ராமச்சந்திரன், கடலூர் மாநகர்-செந்தில், கும்பகோணம் மாநகர்-ராஜ்குமார், தஞ்சாவூர் மாநகர்-இடிமுரசு இலக்கண்ணன், கரூர் மாநகர்-இளங்கோ, திண்டுக்கல் மாநகர்-மைதீன் பாவா, சிவகாசி மாநகர்-செல்வன் ஜேசுதாஸ், நெல்லை மாநகர்-முத்துவளவன், நாகர்கோவில் மாநகர்-அப்துல் காலித்.

    சேலம் கிழக்கு-கருப்பையா, சேலம் மேற்கு-மேட்டூர் மெய்யழகன், சேலம் வடக்கு-தெய்வானை, சேலம் தெற்கு-தமிழன், ஈரோடு மாநகர்-சாதிக், ஈரோடு மேற்கு-தங்கவேல், ஈரோடு தெற்கு-கமலநாதன், ஈரோடு வடக்கு-அந்தியூர் ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு-மும்பை அர்ஜூன், நாமக்கல் மேற்கு-முகிலன், நாமக்கல் மையம்-நீலவானத்து நிலவன்.

    கோவை கிழக்கு-ஸ்டீபன், கோவை மாநகர் வடக்கு-குரு, கோவை மாநகர் தெற்கு-குமணன், கோவை வடக்கு-குடி மைந்தன், கோவை தெற்கு-அசோக்குமார்.

    திருச்சி கிழக்கு-அன்புசெல்வன், திருச்சி தெற்கு-ஆற்றலரசு, திருச்சி வடக்கு-கலைச்செல்வன், தஞ்சாவூர் மையம்-ஜெய்சங்கர், தஞ்சாவூர் மேற்கு-ஜான்பீட்டர், தஞ்சாவூர் தெற்கு-அரவிந்த்குமார், தஞ்சாவூர் வடக்கு-முல்லைவளவன்.

    திருப்பூர் மாநகர்-மூர்த்தி, திருப்பூர் கிழக்கு-ஓவியர் மின்னல், திருப்பூர் தெற்கு-சதிஷ்குமார், திருப்பூர் வடக்கு-சண்முகம்.

    மதுரை கிழக்கு-முத்துப் பாண்டியன், மதுரை மேற்கு-சிந்தனைவளவன், மதுரை தெற்கு-காளிமுத்து, மதுரை மாநகர் தெற்கு-ரவிக்குமார், மதுரை மாநகர் வடக்கு-சுடர்மொழி, தேனி கிழக்கு-ரபிக் முகமது, தேனி மேற்கு-போடி மதன், திண்டுக்கல் மையம்-தமிழரசன், திண்டுக்கல் மேற்கு-கணபதி, திண்டுக் கல் கிழக்கு-தமிழ்முகம்.

    தூத்துக்குடி தெற்கு-டிலைட்டா, தூத்துக்குடி மையம்-கணேசன், தூத்துக் குடி வடக்கு-முருகன், நெல்லை தெற்கு-அருட் செல்வன், நெல்லை மேற்கு-எப்.சி.சேகர், கன்னியாகுமரி மையம்-மேசியா, கன்னியாகுமரி மேற்கு-தேவகி, கன்னியாகுமரி கிழக்கு பேரறிவாளன்.

    தாம்பரம் மாநகர் வடக்கு-திருநீர்மலை தமிழ ரசன், தாம்பரம் மாநகர் தெற்கு-சாமுவேல், சேலம் மாநகர் வடக்கு-காஜா மைதீன், சேலம் மாநகர் தெற்கு-மொழியரசு, திருச்சி மாநகர் மேற்கு-புல்லட் லாரன்ஸ், திருச்சி மாநகர் கிழக்கு-கனியமுதன்.

    சிவகங்கை தெற்கு-பாலையா, ராமநாதபுரம் கிழக்கு-அற்புதகுமார், ராமநாதபுரம் மேற்கு-பிரபாகர், விருதுநகர் கிழக்கு-இனியவன், விருதுநகர் மேற்கு-பிரியதர்ஷினி, விருதுநகர் மையம்-சாத்தூர் சந்திரன்.

    காஞ்சீபுரம் வடக்கு-மேனகா தேவி கோமகன், காஞ்சிபுரம் தெற்கு-எழிலரசு, மயிலாடுதுறை வடக்கு-இனியவன், மயிலாடுதுறை தெற்கு-மோகன்குமார், நாகப்பட்டினம் வடக்கு-அருட் செல்வன், நாகப்பட்டினம் தெற்கு-செல்வராஜ், கடலூர் வடக்கு-அறிவுடை நம்பி, கடலூர் மையம்-நீதிவள்ளல், கடலூர் மேற்கு-திராவிடமணி, கடலூர் தெற்கு-மணவாளன், கடலூர் கிழக்கு-அரங்க-தமிழ் ஒளி, பெரம்பலூர் மேற்கு-ரத்தின வேல், பெரம்பலூர் கிழக்கு-கலையரசன் உள்ளிட்ட மேலும் சில மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    • குழந்தைத் தொழிலாளர் முறையானது மனித உரிமை மீறல் என்றும் அதை ஒழிக்க வேண்டும்.
    • குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'குழந்தைத் தொழிலாளர் முறையானது மனித உரிமை மீறல் என்றும் அதை ஒழிக்க வேண்டும்' என்றும்; தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

    குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிப்பதற்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதற்கும், அவர்களுக்குரிய பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

    • 3 வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். ஆனால் 7 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்கள் நீடித்து வருகிறார்கள்.
    • விவேகத்துடன் வேகமாகவும் செயல்பட்டால் தான் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்று அண்ணனுக்கு நெருக்கமான தம்பிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வதற்கான ஆயத்த பணிகளை 2 வருடத்திற்கு மேலாக கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கான பணியில் தலைமை கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு மாவட்டம் வாரியாக சென்று விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்யப்பட்டது.

    ஆனாலும் இன்னும் மாற்றம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடாமல் இருக்கிறார். 3 வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். ஆனால் 7 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்கள் நீடித்து வருகிறார்கள். தற்போது உள்ள பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவது உறுதியாகி விட்டதால் புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அறிவிப்பார் என்று கட்சி தொண்டர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். தற்போது பொறுப்பில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவதால் கட்சிப் பணியில் ஆர்வம் காட்டவில்லை.

    இதனால் போராட்ட களங்களில் உற்சாகமின்றி நிர்வாகிகள் செயல்படுகின்றனர். கட்சி தலைமை அறிவிக்கின்ற போராட்டங்களை முழுமையாக செய்ய தயங்குகின்றனர்.

    தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் திருமாவளவன் ஆர்வம் காட்டாமல் மவுனமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை மேலோங்கி வருகிறது.

    திருமாவளவன் எதற்காக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் விஷயத்தை தாமதப்படுத்துகிறார் என்பது கட்சிக்குள் இப்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமாவளவனின் மவுனம் கலைந்தால் யாருக்கு லாபம்? யாருக்கு பாதிப்பு? என்பது தெரிந்து விடும். விவேகத்துடன் வேகமாகவும் செயல்பட்டால் தான் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்று அண்ணனுக்கு நெருக்கமான தம்பிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    • 2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டசபை தேர்தலை மையமாக வைத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை மாவட்டத்திற்கு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு இருப்பதால் தற்போது உள்ள 7 மாவட்டங்கள் 8 ஆக உயர்கிறது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட நிர்வாகிகளை மாற்றி சீரமைக்க கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முடிவு செய்தார்.

    7 ஆண்டுகளாக மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் மாவட்டங்கள் அதிகரிக்கப்படுகிறது.

    கட்சி ரீதியாக 100 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், பொருளாளர், ஊடக அமைப்பாளர் உள்ளிட்ட 10 பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

    தமிழகம் முழுவதும் இருந்து 4000 விண்ணப்பங்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த மனுக்களை உயர்மட்ட நிர்வாகிகள் பரிசீலனை செய்து தலைவர் திருமாவளவனிடம் கொடுத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

    இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கட்சியில் மாவட்ட அளவில் புதிய பொறுப்புகளுக்கு வருவதற்கு இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் 25 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தலித் அல்லாத பிற ஜாதியினருக்கு 10 சதவீதமும், மகளிருக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.

    2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டசபை தேர்தலை மையமாக வைத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கட்சி பணிகளை முறையாக செய்யாதவர்கள், கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுபவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

    மாவட்ட செயலாளர்கள் பதவிக்காலம் 4 வருடங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனா தொற்று பாதிப்பால் 2 ஆண்டுகள் கூடுதல் வாய்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னை மாவட்டத்திற்கு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு இருப்பதால் தற்போது உள்ள 7 மாவட்டங்கள் 8 ஆக உயர்கிறது. கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புகள் மாற்றப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிக்கிறார்.

    ×